ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான் (எஸ்தர் 5:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dm6uM71MLdg
பெர்சிய சாம்ராஜ்யத்தின் ராஜாவாய் காணப்பட்ட அகாஸ்வேரு எஸ்தர் ராஜாத்தியை நோக்கி, நீ கேட்கிற மன்றாட்டு என்ன என்றும் என் ராஜ்யத்தில் பாதியை நீ கேட்டாலும் உனக்கு அதைத் தருவேன் என்றும் வாக்குக் கொடுத்தான். சில வேளைகளில் உலக ஜனங்களும், அதிகாரத்தில் இருக்கிறவர்களும், கேட்கிறதைத் தருவேன் என்று வாக்குக் கொடுத்தாலும் அதன்படி செய்வதில்லை. பத்சேபாள், அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள். அப்பொழுது சாலொமோன் அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, தன் தாயாரைத் தன் வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஓர் ஆசனத்தை வைத்தான். அப்பொழுது அவள்: நான் உம்மிடம் ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன், எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும், நான் உமக்கு மறுப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தான். அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம் பண்ணிக் கொடுக்கவேண்டும் என்றாள். உடனே சாலொமோனுக்கு கோபம் வந்தது, நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும் என்று சொல்லி, அவனைக் கொன்று போடும் படிக்குக் கட்டளைக் கொடுத்தான். அவன் சொன்னது ஒன்று, ஆனால் செய்தது இன்னொன்றாய் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு ஒருவரே நீங்கள் கேட்பதைத் தருகிறவர். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் என்றும் என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் என்றும் யோவான் 14:13,14ல் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.
எஸ்தருக்கு அகாஸ்வேருவின் கண்களில் தயைக்கிடைத்ததின் முதல் காரணம், அவள் ராஜாவிடத்தில் செல்லுவதற்கு முன்பு அவளும் அவளுடைய தாதிமாரும் மூன்று நாட்கள் உபவாசம்பணணி தேவனை நோக்கி ஜெபித்தார்கள். உபவாச ஜெபம் தேவ தயவைக் கொண்டுவரும் என்பதைக் கர்த்தருடைய ஜனங்கள் அறியவேண்டும். இரண்டாவது, தன் ஜனங்களுக்காகத் தன் ஜீவனையும் கொடுக்க ஆயத்தமாய் காணப்பட்டாள், நான் செத்தாலும் சாகிறேன் என்று அறிக்கையிட்டாள். ராணியாகக் காணப்படுகிறவள் மற்றவர்கள் மேல் கரிசனைக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவளுக்குள் காணப்பட்ட தியாக உணர்வு தன் ஜனங்களுக்காக எதையும் செய்யத் தூண்டியது. இந்நாட்களில் காணப்படுகிற விசுவாசிகளும், ஊழியர்களும் சுயநலக்காரர்களாய் மாறிவிட்டார்கள். நான், என் குடும்பம், என் சபை என்ற எல்லைக்குள்ளாய் சுருங்கிக் காணப்படுகிறார்கள். இயேசு நம்மேல் கொண்ட தியாகமான அன்பினிமித்தம் விண்ணை விட்டு மண்ணுக்கு வந்து நமக்காய் ஜீவன் கொடுத்த அந்தச் சுயநலமில்லா அன்பின் மேன்மையை மறந்து விட்டோம். மூன்றாவதாக, தன் ஜனங்கள் மேல் கொண்ட பாரம் ராஜாவின் சமூகத்தில் அவளைத் துணிந்து செல்லும்படிக்குச் செய்தது. ஆகையால் தான், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக என்று கேட்டாள். ராஜ்யத்தின்பாதி வேண்டாம், என் ஜனங்களை எனக்குக் கொள்ளைப் பொருளாய் தாரும் என்று வேண்டினாள். இந்நாட்களில், நமக்காகவே வேண்டுதல் செய்து, இதைத் தாரும், அதைத் தாரும் என்று கேட்கிறவர்களாய் காணப்படுகிறோமே ஒழிய ஜனங்களைத் தாரும் என்று ஜெபிக்கிறவர்கள் வெகு சிலராய் காணப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆத்துமாக்களுக்காகத் திறப்பிலே நில்லுங்கள், ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் விரும்புங்கள், அது தேவனுக்குப் பிரியமான ஜெபம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, மற்றவைகளெல்லாவற்றையும் ஆண்டவர் உங்களுக்குக்கூடக் கொடுத்து ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

